Tuesday, January 17, 2012

உருமி - சரித்திரச் சுருள்வாள்!


போர்த்துக்கீசிய நாடுகாண் பயணியான வாஸ்கோட காமா 1498, 1502 மற்றும் 1524 ஆகிய ஆண்டுகளில் கேரளாவிற்கு கடல்மார்க்கமாக வந்து, வைசிராயானது குறித்து நாம் அவ்வளவாக அறியாத விஷயங்களைப் பேசும் திரைப்படம் சந்தோஷ் சிவன் இயக்கியிருக்கும் உருமி’ . தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாக உள்ளதாகக் கேள்வி. எப்போதென்று தெரியவில்லை.

பிரித்விராஜ் சுகுமாரன், பிரபுதேவா, ஆர்யா, நித்யா மேனன், ஜெனிலியா, வித்யாபாலன், தபு என ஒரு பெரும் நட்சத்திரப்பட்டாளமே இணைந்திருப்பது 15ம் நூற்றாண்டின் கதை பேசும் ஒரு பீரியட் சினிமாவுக்காக! பெரும்பாலும் சரித்திரத்தின் சினிமா பதிவுகள் டாக்குமெண்ட்ரியாகிவிடுவது வழமை. சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவும் தீபக் தேவ் என்பவரது இசையும், அற்புதமான நடிகர் குழுவும் உருமியை அவ்வாறன்றி நல்லதொரு சினிமாவாக மாற்றுகின்றன.

தமிழ் நாட்டைச் சார்ந்த சாதாரணனாக நான் அறிந்த வாஸ்கோடகாமா ஒரு பயணி! இங்கு வந்து ஊர்சுற்றிப்பார்த்து குறிப்புகள் எழுதி வைத்திருப்பார் என அவதானித்திருந்தேன். ஆனால் உருமி அந்த வாஸ்கோ ட காமா குறித்த கறுப்புப் பக்கங்களைச் சொல்கிறது.

ஒரு சினிமாவாக, உருமியை எதிர்மறை விமர்சனம் செய்யவே இயலாது என்றல்ல; எனினும் நாம் சற்றும் அறியாத,  நமக்கு காலத்தாலும், தொலைவாலும் மிக அருகில் நடந்த ஒரு சரித்திரத்தினை, அதன் சிலபக்கங்களை நம்முன் திறக்கும் வகையில் உருமியை ஒரு முக்கியமான சினிமா பதிவாகக் கருதுகிறேன்.

உருமியைப் பொறுத்தல்லாமல், இதன் நடிகர்களில் மிகச் சிறந்த நடிப்பாற்றல் உடையவர் என நான் கருதுவது பிரபுதேவாவை. நாயகனின் நண்பனாக கதை நெடுகிலும் உடன் வரும் வவாலி எனும் பாத்திரம் அவருடையது. நிறைவான பங்களிப்பு. அரக்கல் சுல்தானாவாக வரும் ஜெனிலியாவும், கள்ளிக்கோட்டை சிரக்கல் ராஜாங்கத்தின் படைநாயகனான கேளு நாயனாராக வரும் பிரித்விராஜும் மிகச் சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். பாரம்பரிய கேரள போர்க் காட்சிகளில் பிரித்வி ராஜுக்கு இணையாக ஜெனிலியா உழைத்துள்ளதை அறியமுடிகிறது.

சிரக்கல் யுவராணி பாலா தம்புராட்டியாக நித்யா மேனன். கேரள அந்தர்ஜனங்கள் உடுத்தும் பாரம்பரிய உடைகளில் அவரைப் பார்க்கையில் பிவி தம்பியின் கிருஷ்ண பருந்து நாவலின் மோகினிகளை கண்முன் நிறுத்துகின்றன! அவர் வரும் காட்சிகளில் ஒரு தனிவித இசையொன்று பின்னணியில் ஒலிக்கிறது. இவரது தோற்றமும் அந்த இசையும் இணையும் புள்ளியில்... இயல்பாகவே கேரளப் பெண்கள் என்றாலே விழி சொருகும் நாம்... செத்தோம்!

கேளு நாயரின் தந்தையாக சிரக்கல் கொத்துவால் பாத்திரத்தில் ஆர்யா. சில நிமிடங்களே ஆயினும் நல்ல தேர்வு. தபு ஒரு பாடலுக்கு வருகிறார். நடிகர்கள் அனைவரும் சமகாலத்தில் ஒரு பாத்திரமும் 15ம் நூற்றாண்டின் ஃப்ளாஷ் பேக்கில் ஒரு பாத்திரமுமாக வருகின்றனர்.

சுமார் 30 கோடி உருமியின் பட்ஜெட் என்றறிகிறேன். கேரள சினிமாவில் இது இரண்டாவது மெகா பட்ஜெட் படமாம்!

வாஸ்கோடகாமா குறித்து உண்மைத் தரவுகளை நான் சரிபார்க்கவில்லை. ஆனால் உருமி - ஒரு ஃபிக்‌ஷனாக கேளு நாயரால் வெல்லப்படுவதாக சொல்கிறது.

உருமி என்பது கேரள களரிப் போர் முறையில் உபயோகப்படுத்தப்படும் ஒரு வித வாள்! வளையும் தன்மையதான நீளமான வாள்!  வடக்கு கேரளத்தில் உருமி எனவும் தெற்கில் சுட்டுவாள் எனவும் குறிப்பிடப்படும் ஒன்று. கேளு நாயருடைய தங்க உருமியின் பின்னணியில் உள்ள கதையானபடியால் இப்பெயர்.

இனி உருமி.....!

1498- வாஸ்கோடகாமா நன்னம்பிக்கை முனை வழியாக கள்ளிக் கோட்டையை முதன் முறையாக அடைகிறான். கள்ளிக்கோட்டை மன்னர் சாமுதிரி தம்புரானிடம் மிளகு வணிகம் குறித்து வாஸ்கோ முன்மொழிபவற்றை தம்புரான் மறுத்து ஒரு பிடி மிளகு மட்டுமே கொடுத்தனுப்பி வைக்கிறார்.

லிஸ்பன் (போர்துகல்) திரும்பும் வாஸ்கோ 15 போர்க்கப்பல்களுடன் மீள கேரளம் வருகிறான். அரபிக்கடலில் கேரளத்தினின்று மெக்கா யாத்திரை சென்ற மிரா எனும் கப்பலை (400 பயணிகளுடன்) சிறை செய்கிறான். அக்கப்பலில் உள்ள பெண்கள் தாமணிந்திருந்த நகைகள் அனைத்தையும் கொடுக்க முன்வந்தும் வாஸ்கோ ஒப்பவில்லை.

இந்நிலையில் கள்ளிக்கோட்டை சிரக்கல் கொத்துவாலின்(ஆர்யா) 8 வயது மகனுடன் ஒரு பிராமணரை சமாதானம் பேச நடுக்கடலில் இருக்கும் வாஸ்கோவின் கப்பலுக்கு அனுப்பி வைக்கின்றனர். வாஸ்கோ அந்த பிராமணனின் காதை அறுத்து அதற்கு பதில் நாயின் காதை வைத்துத் தைக்கிறான். 400 பேர்களுடன் மிரா கப்பலை தீக்கிரையாக்குகிறான். காப்பாற்றச் சென்ற கொத்துவால் (ஆர்யா) வாஸ்கோவால் கொல்லப்படுகிறார்.
அங்கிருந்து தப்பிக்கும் சிரக்கல் கொத்துவால் மகனான கேளு எனும் 8 வயது சிறுவன் மனதில் இந்தக் கொடுஞ்செயல் ஏற்படுத்திய வடு வாஸ்கோவைப் பழிதீர்ப்பதே தனது ஆயுளின் பயன் என அவனைக்கருதச் செய்கிறது. அதன் பின்னர் அவனது நண்பனான ஒரு இஸ்லாமியச் சிறுவனுடன் அவனது வீட்டில் வளர்கிறான். மிரா கப்பலில் இறந்த பெண்கள் வாஸ்கோவுக்கு கொடுத்து, அவன் மறுதலித்த பொன் நகைகளை உருக்கி ஒரு சுருள் வாள் (உருமி) செய்கிறான். இதன் பின்னர் அவனது பயணம் வாஸ்கோவின் மரணத்தை நோக்கியது.

1502ல் காலனியாக்கம் துவங்கி  கோவா வரை போர்த்துக்கீசியர் வசமானதையடுத்து வைசிராயாக 1524ல்  மீண்டும் கேரளா வருகிறான் வாஸ்கோ அவனது இரு மகன்களுடன்.

இதனிடையில், நாடோடிகளாக அலையும் கேளுவும்(ப்ரித்விராஜ்) அவனது நண்பன் வவாலியும் (பிரபுதேவா)  சிரக்கல் மன்னரது மனம் கவர்ந்து படை நாயகர்களாகின்றனர். சிறு சிறு ராஜாங்கங்களுக்கிடையிலான பகைமையால் சிரக்கல் மன்னர் அரக்கல் சுல்தானாவான ஆயிஷாவை (ஜெனிலியா) சிறைப்பிடிக்க, ஆயிஷாவின் பரங்கியர் எதிர்ப்பு நிலைபாட்டினாலும் அவள் மீதான காதலாலும் கேளு அவளைத் தப்புவித்து தஞ்சம் தருகிறார். புத்தூரின் பழங்குடி மக்களை அணிதிரட்டி சுமார் 1000 பேர் கொண்ட படையினை உருவாக்கி கேளு நாயர், வவாலி, ஆயிஷா ஆகியோர் வாஸ்கோவை பழிதீர்ப்பதாகச் செல்கிறது உருமி.

உருமி திரைப்பட்த்தின் ட்ரைலர் மற்றும் இதர விபரங்கள் இந்தச் சுட்டியில்

Sunday, January 15, 2012

வேட்டை - ஓட்டை

பாக்யராஜ், எம் ஜி ஆர், சில்க் ஸ்மிதா ஆகியோர் நடித்து 1990ல் வெளியான அவசர போலீஸ் 100 படத்தின் ரீமிக்ஸ் தான் லிங்குசாமி இயக்கி விட்டிருக்கும் வேட்டை! 

புரட்சித்தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சி நடைபெறும் அமைதிப்பூங்காவாம் தமிழ்நாட்டின் அனைத்து மாநகராட்சிகளிலும் ரத்த ஆறு ஓடுவதாகவே அண்ணன் சர்வகாலமும் சிந்தையில் குதிரை ஓட்டிக்கொண்டிருப்பதற்கு எதாகிலும் இஸ்மா சட்டம் போட்டு தடுத்தாகவேண்டும் போலிருக்கிறது. இந்தவாட்டி தூத்துக்குடி! 


போலீஸ் பரம்பரையின் சமகால வாரிசுகளான மாதவன் ஆர்யா இருவரில் மாதவன் பயந்த பாக்யராஜ் (அதாவது சிலுக்கின் புருசன்) வேடத்தையும், ஆர்யா கண்ணாடி போடாத பாக்யராஜ் வேடத்தையும் ஏற்றிருக்கின்றனர். பயந்தாங்கொள்ளி மாதவனுக்கு அசைன்மெண்ட்டுகளை ரெயின் கோட்டு போட்டு முடித்துக் கொடுக்கும் அடியாள் ச்சை... சாரி!  அடிபோலீஸ் வேலையைப் பார்க்கிறார் ஆர்யா. தூத்துக்குடியில் இரு தாதாக்கள். இருவருக்கும் லடாய். முதல் பாதி முழுக்க இருவருமே சோதாக்கள்! காமெடியன் இல்லாத குறையைத் தீர்த்து வைத்துக் கொண்டிருந்தனர். 

மெயின் தாதாவுக்குஅண்ணாச்சின்னு பேரு! பாத்தா ஜுலூல் சேட் கணக்கா இருந்தான்! ஆனா எல்லா டையலாக்குலயும் எண்டுல வே சேத்துகிட்டதால அண்ணாச்சின்னு ஒத்துக்குவோம்வே!) . இன்னொருத்தன் மாரி(சோ). ரெண்டு தாதா ஆளுக மேலயும் மாதவனோட சப்ஸ்டியூட்டா ஆர்யா கைவெச்சுடறார். மொதல் தாதாவோட சரக்கு 4 லாரிய ( லாரிதான் சரக்குன்னு நெனச்சுட்டேன் நான்! கடசீ வரைக்கும் லோடு என்னன்னே சொல்லல அவ்வ்வ்!) ஆர்யா ரெய்ன் கோட் சகிதம் ச்சீஸ் செய்து மாதவனிடம் தர; அவர் கோர்ட்டில் ஒப்படைக்கிறார்! சண்டை முற்றுகிறது. ரெண்டு தாதாஸும் அண்ட் கோ போட்டு ஒரிஜினல் ஃபைட்டர் ஆர்யாதான் மேடி டம்மி என கண்டு பிடிக்கின்றனர்.

பின்னர் மாதவனை அடித்து துவைத்து பிராட்கேஜ் தண்டவாளத்தில் வீசிவிட ட்ரெய்ன் கிராஸ் ஆக 1/2 நொடி இருக்கையில் ஆர்யா மாதவன் பாடியை காப்பாற்றிவிடுகிறார். கால் கை உடைந்த காயங்கள் ஆறியதும் மாதவன் வெறிகொண்ட வேங்கையாகி வேட்டையாடுகிறார். ரெண்டு வேட்டையர்களும் தூத்துக்குடியின் ரவுடி சமூகத்தையே அழித்தொழிப்பதே மீதி கதை.


இந்த புதுவகையான கதையோட்டத்தினிடையே, மூன்று பாடல்கள் முடிந்து விடுகின்றன. மூன்றாவது நாயகன் சமீரா ரெட்டியும், ஹீரோயின் அமலாபாலும் அக்கா தங்கை. அரேஞ்சுடு மேராஜாக மாதவன் - சமீரா கன்னாலம் முடிந்துவிட, அமலா பால் - ஆர்யா காதல் தொடங்கித் தொடர்கிறது.

சமீரா ரெட்டி இதில் பெண் வேடம் போட்டு நடித்தாலும் மேக்கப் காட்டிக் கொடுத்து விடுகிறது. கிளைமேக்ஸில் பிரசவ வலியில் இருக்கும் அவரை ஆஸ்பத்திரிக்கு மாதவன் அழைத்துச் செல்ல முற்பட, ‘வேணாங்க நான் வலியப் பொறுத்துக்கறேன், நம்ம வீட்டுக்குள்ள நொழஞ்ச ஒரு வில்லன் கூட உசுரோட போவக்கூடாது அடிச்சுக்கொல்லுங்க, பாத்துட்டே போறேன்’னு சமீரா சொல்லும்போது, கல் நெஞ்சம் கொண்ட நானே ஒரு நிமிடம் கதறியழுதுவிட்டேன் :-( 


அமலா பால்! தனது முதற்படமான சிந்து சமவெளிக்குப் பின்னர் பெரிதாக(!) திறமை காட்ட வாய்ப்புகள் கிடைக்காததால், வேட்டையில் பெரிய அளவில் திறமை காட்ட முற்பட்டிருக்கிறார். ஆனால் முடியவில்லை. இருப்பினும் தன்னிடம் இருப்பதில் ஓரளவு காட்டியே விட்டார் என்று சொல்லலாம். சில பல லிப் கிஸ்ஸுகள்; குளித்த ஈரத்துடன் டர்க்கி டவலை அவிழ்த்து தன்னழகைத்தானே ரசிப்பது; எதிர்ப்புறமிருந்த கண்ணாடி வழியே ஆர்யாவும் அதை ரசித்து விட்டதை அறிந்து வெட்கத்தால் நாணிக்கோணுவது என ஒரு மாதிரியாக செய்திருக்கிறார். 

மாதவன் முதல் பாடலில் டான்ஸ் ஆடுவதை பார்க்க ஆஞ்சநேயா அஜித் போலவே இருந்தது. படம் முழுக்க ஆர்யாவுக்கு அல்லக்கையாக நடித்து விட்டார். ஆர்யா கால்ஷீட் பிரச்சனையால் செகண்ட் ஹாஃபில் சில ஃபைட்டுகள் மாதவனுக்கு தரப்பட்டு இருகின்றன போலும்! இத இந்திக்காரனுவ பாத்தா அங்க அண்ணனுக்கு இருக்கற மருவாதி நாறிடும்!

ஆர்யா - ஒருத்தனுக்கு ஒரு அடி எனும் வியூக முறையில் படம் முழுக்க பலவிதமான WWE ஸ்டைல் சண்டை போடுகிறார். இடையில் அன்னாரது பஞ்ச் டயலாக்குகளும் விரவிக்கிடக்கின்றன! 

பாடல்கள் என்ற பெயரில் படு த்ராபையான சம்பவங்கள் நடந்தேறின.ஒன்று கூட தேறாது என்பது நிச்சயம்!


படத்தின் 90% காட்சிகள் பின்னிமில்லில் தான் நடை பெறுகின்றன! மீதம் இருப்பவை போலீஸ் ஸ்டேசன் செட்டும், ஒரு செட்டி நாடு டைப் வீடும் தான். ஆர்யா - அமலா பால் பாடல் ஒன்றை மெட்ராசில் எதோ ஐடி கம்பேனி வாசலிலேயே முடித்துவிட்டனர். (உள்ளார விடல போல!)

இளம் ஹீரோக்கள் படங்களில் இப்போதெல்லாம் அஜித் படம் சினிமாதியேட்டரில் ஓடுவது போல காட்சி வைத்து ‘தல தல’ன்னு அஜித்தை புகழ்வது மோஸ்தராகிவிட்டது. தல மன்றத்தில் ஆர்யாவும் அட்டனென்ஸ் போடுகிறார்.

ஓட்டையா படம் எடுத்து வேட்டைன்னு பேரு வெச்சிருக்காங்க!

மொத்தத்தில் லிங்குசாமியின் மொக்கைப் பட வரிசையில் இந்த ஓட்டை விழுந்த வேட்டையையும் சேர்த்திக் கொள்ளலாம்!

Friday, January 13, 2012

நண்பன் - Almost well !!!

விஜய் படம் என்றதும் வாயைப் பொத்திக் கொண்டு ப்ர்ர்ர்ர்ர்ர்ர்! என சிரிப்பவர்களுக்கு நண்பன் ஏமாற்றத்தைத்தான் கொடுத்திருக்கிறது எனலாம்! ஹிந்தியில் ஆல்ரெடி ஹிட்டடித்த 3 இடியட்ஸின் ஜெராக்ஸ் தான் என்றாலும், சமீபத்தில் டபாங்கு தமிழாகி போடாங்கு.... என உதைபட்டிருந்தபடியால் ஒரு சின்ன நப்பாசை தான் நமக்கும்! ஆனால் நண்பன் - ஆல் மோஸ்ட் வெல்!


ஆமீர்கான் இடத்தில் விஜயா? என்றொரு கேள்வி! என்னைக் கேட்டால், இதற்கு ஆமீர்கான் தேவையே இல்லை விஜய் போதும்! இன்னுஞ்சொல்லப்போனால் விஜய் பொருத்தம்! ஆனால், அவரது ரசிகர்களுக்கு அன்னார் அருவாளுக்கு சாணை பிடிக்கும் பாத்திரமாக நடித்து பெண்டெடுத்தால் தான் நிரம்பக் குஷி!!! 


விஜய்க்கு அடுத்து ஆட்களைப் பிடிப்பதில்தான் கொஞ்சம் சறுக்கல் என நினைக்கிறேன்! முதலாவதாக, இலியானா! ஒண்ணுமே இல்லை (அதாவது சொல்றதுக்கு) (இல்லையேண்ணா!) அம்மணி கிழடு தட்டிப்போய் அம்மணத்துறவி பூனம் பாண்டே சாயலில் இருக்கிறார்! டப்பா படமான கேடியில் கூட பார்க்கும்படியாக இருந்தார்! படம் துவங்கி அரைமணி நேரம் கழித்து அம்மணி ஒரு சப்பை சீனில் அறிமுகமாகையில் அட, ஆமால்ல! ஹீரோயின்னு ஒண்ணு படம்னா இருக்கும்லன்னு தோணுச்சு! அப்புறம் கடைசில பார்த்தா, இதுக்கு இல்லாமலே இருந்திருக்கலாம்னு தோணவெச்சிடுச்சு! அது போலவே, இல்லாதவற்றை இருப்பது போல காட்ட அவர் பிரம்மப் பிரயத்தனங்களில் ஈடுபடுகிறார்! ஒண்ணு ரெண்டு பாடல் காட்சிகளில் அம்மணியின் இல்லாமையை வெள்ளைக்காரப் பெண்களை வைத்து இல்லாமலே செய்துவிட்டார் ஷங்கர்!

ஜீவா! நச்! கனகச்சிதம்! நன்றாக காமெடி செய்யும் பயபுள்ளைக்கு கொஞ்சம் சீரியஸ் ரோலாகக் கொடுத்து விட்டார்கள்! 

ஸ்ரீகாந்த்துக்கு கதிர், சசி போன்ற விக்ரமன் வழித்தோன்றல்கள்தான் லாயக்கு! இன்னமும் 1990 ரக நடிப்பையே சாறு புழிந்துகொண்டிருக்கிறார்! ஆல் ஈஸ் வெல் என்ற அலையில் இந்த மட்டை கரை தேறிவிடுகிறது!

சத்யன் - கொஞ்சம் சீரியஸாகவும் இருந்திருக்க வேண்டிய கேரக்டர் முழுக்கவும் காமெடி பீஸாகிவிட்டது! 

சத்யராஜ் - சூப்பர் செகண்ட் இன்னிங்ஸ்! ஹேர் ஸ்டைல், பாடி லேங்குவேஜ் என வெளுத்து வாங்கியிருக்கிறார்! வயசான ப்ரொபசர்களுக்கே உண்டான மொக்கை இங்கிலீஷ்! ஷ என்ற வார்த்தையை உச்சரிக்கையில் நாக்கை மேலண்ணத்தில் அழுத்தும் மேனரிசம் என பட்டைய கிளப்புகிறார்! நெடுக டெரராக வந்தாலும், கடைசியில் கண்ணைக் கசக்கிக் கொண்டு திருந்தி விடுகிறார்!  

எஸ் ஜே சூர்யா - 5 நிமிசத்துல நம்மள ஆள விட்டுட்டார்; அந்த விதத்துல பாராட்டலாம்! 

இது போக தெரிஞ்ச மூஞ்சிகளே இன்னும் 10க்கு குறையாமல் இருக்கும்!

படத்தின் ஸ்பெஷல் ஆங்காங்கே கைதட்ட வைக்கும் அட! ரக வசனங்கள்! 

பாடல்களில் முதல் இரு வரிகளுக்கு மேல் சுரத்தே இல்லை! உள்ளதில் டைட்டில் சாங்கும் ஹஸ்கு லஸ்கின் சில இடங்களும் ரசிக்க வைத்தன! பாடல்காட்சிகளைப் படமாக்கியதைப் பார்க்கையில் ஷங்கரின் சொந்த புரொடக்சனோ என யோசிக்க வைத்தது! முந்தைய படங்களின் செட்டுகளை பிரித்து தன் வீட்டு அட்டாளியில் சேமிக்கும் பழக்கம் இயக்குநருக்கு உண்டெனக் கருதுகிறேன்!

ஃப்ரிஜ்ஜைத் திறந்தது போல ஃப்ரெஷ்ஷான ஒளிப்பதிவு! விஜயை காலேஜ் பையனாகவே நம்ப வைத்துவிடுகிறது! 

அனேகமாக எல்லா கேரக்டரிடமும் அறை வாங்கிவிடுகிறார் விஜய்! நண்பர்கள், தலைவா என காலில் விழும் காட்சிகள் தவிர சுத்தமாக பில்ட் அப்புகள் தடை செய்யப் பட்டிருக்கின்றன! நல்ல விசயம்!

சம்பிரதாய காட்சி அமைப்புகள் ஆங்காங்கே எட்டிப்பார்த்தாலும், கதையின் ஓட்டத்தில் லயித்து விடுகிறோம்! சீரியஸான இடங்கள் அனைத்துமே காமெடியாக்கப் பட்டிருக்கின்றன அல்லது காமெடி புகுத்தப் பட்டிருக்கின்றன!




ஐஐடி ரக இஞ்சினியரிங் காலேஜ்களையும் அரதப்பழசான மனனம் செய்து வாந்தியெடுக்கும் கல்வி முறையையும் ஏகத்துக்கும் விமர்சிக்கிறது படம்!
ரொம்ப நாட்களுக்குப் பின் கல்லூரி கேம்ப்பஸ் படம்! அதனாலேயே ஒரு கிக்!
காலேஜ் பிரின்சிபலை மூக்குடைக்கும் ஹீரோ சரடை, வசூல்ராஜா எம்பிபிஎஸ்ஸில் நன்றாக கிண்டிக் கெழங்கெடுத்துவிட்டதால் நண்பனில் இப்போது புதுசாக தெரிவதில்லை! குஞ்சாமணிக்கு ஷாக் வைப்பது, பரிட்ச்சை பேப்பர்களைக் கலைத்துவிடுவது, புக் என்பதற்கு விளக்கம் சொல்வது போன்ற காட்சிகளில் விஜய் கலக்கல்!

  கிளைமேக்ஸில், ’’’அந்தக்க்க்க்கொழந்தைய்ய்ய்ய்ய்யே நீங்கதான் சார்’’’ ரேஞ்சில் விஞ்சாணியாக்கிவிட்டார்கள் விஜயை!படம் முழுக்க பஞ்சவன் பாரிவேந்தன்னு பேர் வெச்சிருந்தாங்க! இடைல பப்பூன்னாங்க கடசீல எதோ ஜப்பான் நாட்டு பேர சொல்லி இதான் ஒரிஜினல்னானுக! அந்தக் கெரகம் வேற இப்ப எனக்கு நியாபகம் வரமாட்டீங்குது! ‘கொசாசி பஞ்சமுஞ்சு’ன்னு நெனைக்கறேன்! சின்னச்சின்ன மொக்கைகள்,லாஜிக் மீறல்கள் ஆகியவற்றை விஜய் தனது ஸ்க்ரீன் ப்ரெசென்ஸினால் சரிக்கட்டிவிடுகிறார்! ஒரு ஜனரஞ்சக பொழுது போக்கு சினிமாவாக நண்பன்- பொங்கல் பட்டாசு!

ஷங்கர் சினிமாவை விமர்சிக்கும் ரேஞ்சுக்கு ஆழ நோண்டாமல் விஜய் படம் என்ற அளவில் படத்தைக் கருதினால் நண்பன் - சூப்பர்! 

நண்பன் ஏமாற்றினால் என்ன!? இனி வரும் படங்களில் நம்மை எல்லாம் பழையபடி கிச்சு கிச்சு மூட்டும் விஜய் திரும்ப வருவார் என ஆவலுடன் காத்திருப்போம்! ஆல் ஈஸ் வெல்!