Saturday, October 29, 2011

கிழிகிறது ஜெ-வின் முகமூடி


மூவர் தூக்கு தண்டனை விசயத்தில் ஜெயலலிதாவின் கோரமுகம் வெளிப்படுவதற்கான முகாந்திரங்கள் தெரிகின்றன. உள்ளாட்சித்தேர்தலில் ஓட்டுப் பொறுக்குவதற்காகத்தான் ஆகஸ்ட் 30ம் தேதி சட்டப்பேரவையில் தீர்மான நாடகம் நடத்தியிருக்கிறார் என்று கருதும்படியாக இருக்கிறது நேற்று தமிழக அரசின் சார்பில் உள்துறை முதன்மைச் செயலரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவினது சாரம்.


மரணதண்டனையை இரத்து செய்யக் கோரியுள்ள மூவரின் மனுக்களை தள்ளுபடி செய்யுமாறு தமிழக அரசு கோரியிருப்பதையடுத்து, இனி வரும் நாட்களில் முதலமைச்சரின் சுயரூபம் வெளிப்படும் என்றே கருதுகிறேன். இது மட்டுமல்லாமல் கூடன்குளம் விவகாரத்திலும் போராட்டக்குழுவுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை வெளிப்படுத்தி வந்த முதல்வர் இனி அது தொடர்பாகவும் இடியிறக்கும் செயல்பாடுகளை முன்னெடுப்பார் என்று நம்பலாம்.

இவ்விரு விடயங்களிலும் தமிழகத்திலுள்ள 100% மக்களும் ஒரே விதமான கருத்துகளைக் கொண்டிருப்பார்கள் என்று சொல்லவில்லை; ஆனால், மூவர் மரண தண்டனையை இரத்து செய்யக் கோரும் மக்கள் மற்றும் கூடன் குளம் அணுமின்நிலைய எதிர்ப்பு நிலைப்பாடு கொண்ட மக்களிடமிருந்து வாக்குகளை மட்டும் இழந்து விடக்கூடாது என்ற நோக்கில் நரித்தனமாக இவ்வரசு செயல்படுமானால் சில மாதங்களுக்கு முன்னர் அரச அரியணையிலிருந்து தூக்கியெறியப்பட்ட தி.மு.கவினுடைய சரிவிலிருந்து என்ன புரிந்து கொண்டிருப்பார்கள் என்று நமக்குப் புரியவில்லை.

இதையெல்லாம் எதிர்த்துப் போராடக்கூடிய அளவில் அமைப்பு ரீதியாக அதிமுகவுக்கு அடுத்தபடியான வலிமை கொண்ட தி.மு.கவின் கடைக்கோடி தொண்டன் வலுவிழந்து சோர்ந்தும் துவள,இரண்டாம் கட்டத்தலைவர்கள் சிறைகளிலும், நீதிமன்றங்களிலும் அல்லாட, தலைமையை அலங்கரிபவர்கள் தத்தமது முந்தையகால செயல்பாடுகளால் இது குறித்து வாய் திறக்கவே தார்மீக ரீதியில் வக்கற்றும் இருக்கின்றனர். மீறி உதிர்க்கும் கருத்துகள் கூட கடந்தகாலத்தையும் அதன் வடுக்களையும் மறவாத மக்கள் திரளால் கிஞ்சித்தும் காதுகொடுத்துக் கேட்கப்படுவதில்லை.

போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் வெகுஜனங்களின் கருத்தை ஈர்க்க மதிமுகவும் இடதுசாரிகளும் மட்டுமே உள்ளனர். சட்டமன்றம்/உள்ளாட்சிகள் என அனைத்திலும் வலுவான பிரதிநிதித்துவம் பெற்றுள்ள அதிமுகவை எதிர்க்க மீதமுள்ள நான்கரை ஆண்டுகளுக்கு வலுவான அரசியல் இயக்கம் எதுவும் இங்கில்லை என்பது ஜெயலலிதா போன்ற பாசிச தலைமைக்கு எத்தகு மக்கள் விரோத நடவடிக்கையையும் மேற்கொள்ளுவதற்கான உந்துதலை ஏற்படுத்தும் என்பது மட்டும் நிஜம்.

ஆட்சியாளர்களது மக்கள் விரோத நடவடிக்கைகள், நமது மக்களின் சகிப்புத்தன்மை என்பதன் எல்லை எதுவரைதான் நீளும் என்பதைக் காட்டும் என நெடுங்காலமாக மவுன சாட்சிகளாக காத்திருக்கிறோம்ஆனால் அதற்கேதும் முடிவிருப்பதாகத் தெரியவில்லை. வெளிச்சத்தின் சிறு கீற்றுகூட எதிர்ப்படும் இருளடைந்த பாதையில் புலப்படவில்லை.